Friday, February 1, 2013

கிரீடமல்ல தலைப்பாகை




நல்ல பேனாவும் நல்ல அரசியலும் கை கோர்க்கும்போது எவ்வளவு அழுத்தமாக உயிர்ப்போடு இலக்கியம் உருவாகும் என்பதை ரத்தமும் சதையுமாக நிரூபித்திருக்கிறது தோழர். டி. செல்வராஜின் “ தோல்.”

மட்டுமல்ல, இடதுசாரிகள் வர்க்கத்தின்பால் மட்டுமே கவனமாக இருப்பார்கள், வர்ணப்பிரச்சினையைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் அல்லது, அவர்கள் வர்க்கப் பிரச்சினையை கவனத்திலெடுக்குமளவிற்கு வர்ணப் பிரச்சினையின்மீது கவனம் குவிக்க மாட்டார்கள் என்பது மாதிரியாக திட்டமிட்டு படிய வைக்கப் பட்டுள்ள பொதுப் புத்தியினை “தோல்”  துனையோடு மிகக் கம்பீரமாக எதிர் கொள்கிறார் தோழர் டி. செல்வராஜ்.

 “இந்தியாவில் கம்யூனிச இயக்கங்கள் தடை செய்யப்பட்டிருந்த கால கட்டத்தில் தோராயமாக 1930 முதல் 1958 வரையிலும் நடைபெற்ற போராட்டங்கள், அதில் ஈடுபட்ட போராளிகளின் பாத்திரங்களை நாவலில் வடித்துள்ளேன்,” என்று 36 வது புத்தக கண்காட்சியில் தனக்கு அளிக்கப் பட்ட பாராட்டுகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது தோழர் டி.செல்வராஜ் கூறுகிறார். முதலில் தோழர்கள் A.பாலன் , மற்றும் S.A.தங்கராஜ் ஆகியோரோடு இந்த நாவல் மூலம் உறவாட நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்தமைக்கு தோழர் செல்வராஜுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஜனவரி 2013 புத்தகம் பேசுது இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் தோழர் டி.செல்வராஜ் சொல்கிறார்,

“என் கருத்தில் ஒரு நாவலின் குறிக்கோள் சமுதாய மாற்றத்தைச் சித்தரிப்பது.வாசகனின் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்துவது முக்கியம். சமுதாயப் பொறுப்புணர்வு இருந்தால்தான் நம் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.”

சமூக அவலங்களை, ஒடுக்கப் படும் விளிம்புநிலை மக்களின் ரணத்தை , வலியை சித்தரிப்பதோடு பெரும்பான்மை நல்ல படைப்புகள் பொறுப்பினை சுறுக்கிக் கொண்டு தங்கள் முதுகுகளைத் தாங்களே தட்டிக் கொண்டு சிலாகித்துத் திரியும் பொதுக் கட்டமைப்பு நிலைபெற்றுள்ள இன்றைய சூழலில் சமுதாய மாற்றத்தை சித்தரிப்பதுதான் நல்ல நாவலின் அடையாளம் என்கிறார் தோழர்.

பாமர வாசகனாக ஒன்றைக் கேட்கலாம். எது மாதிரி இருந்த சமூகம் எது மாதிரியாய் மாறியுள்ளதை “தோல்” அடையாளப் படுத்துகிறது?

திண்டுக்கல் நகரம் முழுக்க தோல் தொழிற்சாலைகள். ஏறத்தாழ எல்லா தொழிற்சாலைகளுமே உயர் மற்றும் இடைசாதி முதலாளிகளுக்கு சொந்தமானவை. (ஒன்று மட்டும் தாழ்த்தப் பட்டவர்களுக்கு உரியதாய் உள்ளது)

அந்த தோல் ஷாப்புகளில் வேலை பார்க்கிற ஊழியர்கள், ஊழியர்கள் என்று சொல்வது கூட சரியில்லை, அடிமைகள் பெரும்பகுதி தலித்துகள்.

பெரும் முதலாளிகள் ஊழியர்களச் சுரண்டிக் கொழுக்கும் போக்காகக் கொண்டால் அது வர்க்கப் பிரச்சினை.

உயர் சாதிக் காரர்கள் தலித்துகளை சுரண்டிக் கொழுக்கிற போக்காகக் கொண்டால் இது வர்ணப் பிரச்சினை

வறட்டுத் தனமான விளிம்பு நிலைக்குப் போகாமல் இரண்டையும் ஒரு சேர எடுத்து சங்கரன் என்கிற மேட்டுக் குடித் தோழனும், சந்தானத் தேவன் என்கிற இடைசாதிக் காரத் தோழனும் ஓசேப்பு என்கிற கடைசாதித் தோழனும் இன்னும் இதே போன்று பல சங்கமங்களையும் படைத்து வர்க்கமாயும் வர்ணமாயும் ஒரு விடுதலையை சாத்தியப் படுத்தியிருக்கிறார் தோழர். செல்வராஜ்.

அதுவும் எதுமாதிரியான சூழலிலிருந்து இது மாதிரியான ஒரு சமூக மாற்றத்தை அவர் தனது படைப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

ஒடுக்கப் பட்ட உழைக்கும் பெண்களை முதலாளிமார்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வேடிக்கை பார்ப்பதைத் தவிர சத்தமாய் அழுவதற்கும் புலம்புவதற்கும்கூட உரிமை மறுக்கப் பட்டிருந்த ஒரு காலத்தில் ... ஒடுக்கப்பட்ட கடையர்களளை ஒரு இயக்கம் எப்படி ஒன்றிணைத்து போராடச் செய்து மீட்டெடுத்தது என்பதை சகதி மணக்க, கடுக்காய் குழி கொதிக்க உள்ளது உள்ளபடி பௌடர் பூசாமல் செண்ட் அடிக்காமல் இவை எதையும் விட உழைக்கும் மக்களின் வியர்வை நாற்றம் வசீகரமானதும் உன்னதமானதும் என்பதை தேவையான அளவிற்கு கடுக்காய் அளவும் குறைந்துவிடாத அழகியலோடு பதிவு செய்கிறது “ தோல்”

 அன்றைய சூழல் எப்படி இருந்தது என்பதை இந்த நாவலில் வரும் ஒரு சம்பவம் புரிய வைக்கும்,

ஆசீர் என்று ஒரு கதாபாத்திரம். இந்த நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரமாக வளர்ந்து மிளிரப்போகிற கதாப் பாத்திரத்திரமான ஓசேப்பின் தந்தை. தோல் தொழிற்சாலைகளில் கடுக்காய் குழியில் தோல் மாற்றிப் போடும் வேலையில் திண்டுக்கல் பகுதியில் இவனை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று சொல்லும்படிக்கு தொழில்காரன். அவனது மனைவி இறந்து போகிறாள். அடக்கம் செய்ய அவனிடம் காசு இல்லை. தனது முதலாளி அஸன் ராவுத்தரிடம் இரந்து கடன் வாங்குவதற்காக அப்போது குழந்தையாக இருந்த ஓசேப்பை அழைத்துக் கொண்டு வருகிறான்.

தாயில்லாத அந்த சிறு குழந்தையைக் கண்டாலாவது ராவுத்தருக்கு இரக்கம் பிறக்காதா என்று நினைத்திருக்கக் கூடும்.

மனைவியை இழந்து வந்து நிற்கும் அவனது அவலத்தை கணக்குப் பிள்ளை கனி ராவுத்தர் சொன்னபோது அஸன் சொல்வதைக் கேளுங்கள்,

“ மாதர் சோத், அரே சைத்தான், விடிஞ்சதும் விடியாததுமா மவுத்தான சேதியைத்தான் சொல்ல வந்தீரா அத்தா” என்று சொன்னவன்,

“ஒம் சசாரம் மௌத்தான சமுசாரத்தைச் சொல்லிட்டேல்ல, இன்னைக்கு வேணண்டா லீவு எடுத்துக்க. மையச் செலவுக்கு எல்லாம் நம்மால சல்லிக் காசு தர ஏலாது” என்று சொன்னவன் ஓசேப்பைப் பார்த்ததும் மலர்ச்சியடைந்தவனாக,

“ஒம் பொண்டாட்டி மையச் செலவுக்குப் பணம் கேட்டியில்ல. நீயும் இந்தப் பொடியனும் முறியில கை ஒப்பம் வச்சிட்டுச் சல்லிய வாங்கிட்டுப் போ.மத்ததெல்லாம் பொறவு பார்த்துக்கலாம்” என்கிறான்.

 மனைவியை சாகக் கொடுத்துவிட்டு அவளைப் புதைப்பதற்கு வக்கற்றவனாய் கையேந்தி வந்து நிற்பவனிடம் முதலாளி நடந்து கொள்ளும் விதம் இருக்கிறதே, பொருளற்ற அவனது ஏழ்மையைப் பயன்படுத்தி அவனது குழந்தையையும் ( பச்ச மண்ணுங்க சாமி என்பான் ஆசீர்) அடிமை படுத்தும் ஈனத்தனம் இருக்கிறது பாருங்கள் அது வர்க்கம் சார்ந்த பிரச்சினை.

அதே வேளை பறையர்களும் சக்கிளியர்களும் தங்களது சாதியின் பொருட்டாகவே அனுபவிக்கும் வலிகளும் அநீதிகளும் வர்ணம் சார்ந்த பிரச்சினைகள். ஆனால் இரணையும் ஒரு சேரப் பிணைத்து தோழர் தீர்வு காணும் பாங்கு இருக்கிறது பாருங்கள் அது சத்தியமாய் சோசலிச எதார்த்தவாதம்தான்.

நாவலின் தொடக்கமே முதாளாளி வர்க்கம் அதுவரை பேணிக் காத்துவந்த கட்டமைப்பை அசைத்துப் போடுகிறது.

முஸ்தபா மீரான் என்கிற காமுக முதலாளியை ஓசேப்பு என்கிற கடைசாதி அடிமை மண்டையைப் பிளந்து போட்டிருக்கிறான் என்கிற செய்தியோடுதான் முதல் பக்கமே துவங்குகிறது. இது, இது, இதுதான் தோழர் செல்வராஜ்.

சின்னக் கிளி என்ற சமைந்து ஓரிரு வாரங்களே ஆன பச்சைப் பிள்ளையை நிர்வாணப் படுத்தி இழுத்துப் போகிறான் மீரான். எல்லோரும் பார்த்துக் கொணிருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நின்று கொண்டிருந்தபோது ஓசேப்பு அவந்து மண்டையைப் பிளக்கிறான்.

கீழத் தஞ்சை ஆண்டையாக இருந்தாலும், தோல் ஷாப் இஸ்லாமிய முதலாளியாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார்கள். அழ்கான பெண்களைக் கண்டால் கசக்கி எறிந்துவிடுவது என்பதில். அதில் பச்சைக் குழந்தைகளையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை.

யாருக்கும் தெரியாமல் வன்புணர்ந்து யாரிடமும் சொன்னால் கொன்று போடுவேன் என்று மிரட்டும் ஈனக் காரியத்தையே நாகரீகமாக மாற்றிவிடும் அளவு கொடூரமானதும் ஈனத்தனமானதும் ஆகும் இந்த ஆண்டைகளின் பாதகங்கள்.

அவர்களின் காம அரிப்புக்கு அவர்கள்  தேர்ந்தெடுத்த பெண்ணின் தாய், தந்தை, சகோதரன் சகோதரி யார் இருந்தாலும் அவர்கள் கண்ணெதிரிலேயே புணர்வது, திமிறி எதிர்ப்புக் காட்டும் பெண்களை கொன்று போடுவது என்பதாக விரிகிறது இவர்களின் காமக் கொடூரம். முணங்கிக் கொண்டோ, சபித்துக் கொண்டோ நடப்பதை மௌனிக்கும் இவர்களின் இணங்குதலுக்குள் இருக்கும் அரசியலை அழுத்தமாக அம்பலப் படுத்துவதுடன் அதிலிருந்து மீள்வதற்கான அரசியலை அவர்களை கையெடுக்கச் செய்து , போராடவும் இறுதியாய் மீளவும் செய்கிறார்.

நாவலில் ஓரிடத்திலொரு தாழ்த்தப் பட்ட பெண் இறந்த போது அவளது பிணத்தை தங்கள் வீதி வழியாக கொண்டு போனால் தெரு தீட்டுப் பட்டுவிடும் என்று கூறி தங்களது தெருவை மறித்துக் கொண்டு ஆயுதங்களோடு நிற்கிறார்கள். தலித்துகள் தடுமாறி நிற்கிறபோது அவர்களை எதிர்க்கவும் இயலாமல் வேறு வழியும் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சங்கரனும், சப் கலக்டரும் பாடியை தூக்குங்கள் பார்த்துவிடலாம் என்று தைரியம் சொன்னபோதும் பயந்துபோய் ஸ்தம்பித்து நிற்கிகிறார்கள். அவர்களுக்கு தைரியம் வரழைக்க வேண்டி சங்கரனும் சப் கலக்டரும் பாடையைத் தூக்க அக்ரஹாரமே அவனை தள்ளிவைக்க கொதிக்கிறது.

அது அப்படித்தான் இருக்கும். 01.08.1920 அன்று திலகர் இறந்த பொழுது அவரது பாடையை தூக்கிய காந்தியை பிராமணர்கள் வைசியன் பிராமணன் பாடையத் தூக்கினால் பிணம் தீட்டுப் பட்டுவிடும் என்று அவரைக் கீழே தள்ளி விடுகிறார்கள்.

என்ன கொடுமை இது? தலித் பிணம் தங்களது தெருவில் வந்தால் தெரு தீட்டுப் பட்டு விடும் என்கிறான். பிராமணப் பிணத்தை வைசியன் தொட்டால் பிணமே தீட்டுப் பட்டு விடும் என்கிறான். ஆனால் இவற்றிற்கிடையில் உள்ள தத்துவங்களுக்குள் நுழைந்து விசாரம் செய்யாமல் விடுதலைக்கான சரியான வழியைக் காட்டுகிறது “தோல்”

கதை சொல்லி காக்கையன் கதாபாத்திரம் மிக அருமையான படைப்பு. பாற்கடலைக் கடைந்த போது மூதேவி சேரிக்கு வந்த கதையை சொல்கிற நேர்த்தி மிகவும் அலாதியானது.

அவனது மனைவி புணத்த எரிக்கிற சோலிய முடிச்சுக்கன்னா கேக்குறியா. நெருங்க முடியல ஒரே பொணவாட என்றபோது இதுக்கே இப்படின்னா சதா சர்வ காலமும் சுடுகாட்டுலேயே இருக்கிற சிவன் பக்கத்துல எப்படி பார்வதி படுப்பா? என்பதுசிவனும் பார்வதியும் எதார்த்தமல்ல புனைவு என்பதை சொல்லும்.

தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கையைப் பற்றி வாசிக்கிறபோது  அரசியல் வகுப்புகளில் நமக்கு கிடைத்த பல தலைவர்களையே பார்ப்பது போல இருக்கிறது. அதுவும் அந்தத் தலைவர்கள் எதை எல்லாம் சாப்பிட்டு இயக்கம் நடத்தியிருக்கிறார்கள் என்பதை வாசிக்கும் போது கண்கள் உடைகின்றன.

பதப் படுத்த வருல் தோலில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடிய இறைச்சியை சுரண்டிக் கொண்டு வந்து அதை சமைத்து  தலை மறைவாய் இருக்கும் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப் படும் உணவே அவர்களுக்கான விஷேச விருந்து என்பதைப் படிக்கும் போது அய்யோ என்றிருக்கிறது.

இந்தப் புதினத்தில் ஆசீரின் மேல் தாயம்மாவிற்கு இருக்கும் காதலும், அந்தக் காதலுக்காக அவனது குழந்தையை அவள் தன் குழந்தையாகவே பாவித்து பெற்றோர் இருவரும் இறந்து போனதால் அநாதையாகிப் போன ஓசேப்பிற்கு தாயாய் தந்தையாய் வாழும் வாழ்வு இருக்கிறதே... அப்பப்பா.., நான் வாசித்த காதல்களுல் மேன்மையானது இது.

இதற்கு கொஞ்சமும் குறைவானது அல்ல அருக்காணி ஓசேப்பு காதலும், சங்கர் வடிவாம்பாள் காதலும்.

சிட்டம்மா பாத்திரம் எவ்வளவு கனமானது. என் மக்னுக்கோ மகளுக்கோ பெண் பிள்ளை பிறந்தால் நிச்சயமாய் நான் சிட்டம்மா பெயரை முன்மொழிவேன்.

இந்த நாவலில் எது இல்லை?

முதலாளி வர்க்கத்தின் அப்பட்டமான கொடூரச் சுரண்டல் அரசியல் இருக்கிறது. சாதி அரசியல் இருக்கிறது. அடிமைகளாய் தங்களை சுருக்கிக் கொண்ட உழைக்கும் ஜனத் திரளை உணர்ச்சிப் பெறச் செய்து ஒன்றுதிரளச் செய்யும் அரசியல் இருக்கிறது. வறட்டுதனமான தத்துவம் பேசாமல், அதே நேரத்தில் சரியான சித்தாந்தங்களை களத்தில் எடுத்துச் செல்லும் நடை முறை அரசியல் இருக்கிறது. கள சூட்சுமங்களைச் சரியாய் கை கொண்டு ஒடுக்கப் பட்ட ஜனங்கள் இயங்கும் அர்சியல் இருக்கிறது.ஏன், பாண்டிச்சேரி தங்கப் பறையனுக்கும் திண்டுக்கல் பறையனுக்கும் இடையே உள்ள முரண்களை அம்பலப் படுத்துகிறது.

பொதுவாக முதலாளிகள் தங்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது எதையும் கடந்து ஒன்றினைவார்கள். ஆனால் உழைக்கும் மக்களை அப்படிச் சேர விடாமல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் இந்தப் புதினத்தில் அது உடைந்து உயர் சாதி, மற்றும் இடைசாதி மக்கள்  ஒடுக்கப் பட்ட கடை சாதி மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் அவர்களோடு ஒன்றிணைந்து அதை சாதித்துக் காட்டியது இந்த நாவலின் சிறப்பு.

“அதாவது, தலித்தியம், பெண்ணியம், தமிழ்த் தேசியம் சேர்ந்த சொல்லாடல்கள், தமிழ்ச்சூழலில் இன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.ஏன் இப்படி?என்று ஒரு நண்பர் கேட்டார்.  மார்க்ஸியம்தான் காரணம் என்றேன்.ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலமாக இங்கு விதைக்கப் பட்ட மார்க்ஸிய சிந்தனைதான் ஒடுக்குமுறையின் பல்வேறுபட்ட வடிவங்களையும் , ஆதிக்க அதிகார சக்திகளின் நுட்பமான தந்திரங்களையும் பச்சையான சுயநலக் கூறுகளையும் அடையாளம் கண்டுகொள்வதற்குத் துணை போகின்றன.எனவே மார்க்ஸியத்தின் நீட்சியாகவே இவைகளை நான் பார்க்கிறேன்” என்று தோழர் பஞ்சாங்கம் சொல்வதை தனது மின்னுரையில் தோழர் செல்வராஜ் சொல்கிறார்.

தலித்தியம் மற்றும் பெண்ணியத்தை மார்க்ஸியத்தின் நீட்சியாகவே தோழர் பார்த்திருக்கிறார் என்பதை “தோல்” சொல்கிறது.

அவருக்கு அளிக்கப் பட்ட பாராட்டுகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது தோழர் செல்வராஜ் சொல்கிறார்,

“கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தடை செய்யப்பட்டிருந்த கால கட்டத்தில் மேற்கொண்ட போராட்ட முறைகளை ஆய்வு செய்து புதிய வடிவங்களை வகுத்து செயல்பட வேண்டிய கட்டாயம் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்டுள்ளது”

இது கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல ஒடுக்கப் பட்ட மக்களுக்காக போரடும் எந்த ஒரு அமைப்பிற்கும் நீண்டு பொருந்தவே செய்கிறது.

சாகித்ய அகாதமி விருது என்பது சின்ன தலைப் பாகைதான்.
கிரீடத்திற்கே உரிய தலை தோழருடையது.


  நூல் வெளியீடு:

 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை-600098
பக்கங்கள்: 695, விலை - ரூ 375


நன்றி: காக்கைச் சிறகினிலே

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home